Sunday, 10 February 2013

இந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை, பரந்த உள்ளத்தின் உச்ச நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.


நீங்கள் எல்லோரும் ஒரே மனத்திராக இருங்கள்.நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவராக இருங்கள்.ஒரே மனத்தவராக இருப்பதுதான் ஒரு சமுதாயத்தின் வெற்றியின் ரகசியம்.திராவிடன்,ஆரியன் முதலிய அற்ப விஷயங்களையும்,பிராமணன் பிராமணன் அல்லாதவன் என்றெல்லாம் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந்தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்கவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும்மேலும் விலகிப்போகிறீர்கள்.இந்த கருத்தொற்றுமையெல்லாம் விலகியே தீரவேண்டும்.


மனிதன் பெறக்கூடிய ஆற்றலுக்கு முடிவேயில்லை.இந்திய மனத்தின் சிறப்பு இது.ஏதாவது ஒன்றில் ஆழ்ந்துவிட்டால் அதில் மூழ்கிவிடும்,பிற விஷயங்களைப் புறக்கணித்துவிடும்.எத்தனையெத்தனையோ விஞ்ஞானங்கள் இந்தியாவில் பிறந்தன தெரியுமா?.அல்ஜீப்ரா, கணிதம் தோன்றியதும் இந்தியாவில் தான்.நியூட்டன் பிறப்பதற்க்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் புவியீர்ப்புவிதியை தெரிந்து வைத்திருந்தனர்.


தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும்.இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளது.தூய்மையும் ஒழுக்கமும் உள்ளவன் தன்னை அடக்கியாள்கிறான்.எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை,ஒரே பெரிய மனத்தின் பகுதிகள்.களிமண் கடடி ஒன்றை அறிந்தவன்,பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்.தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தைப்பற்றிய ரகசியத்தையும் அறிகிறான்.ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.


ஆண்பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இறைவனாகப் பாருங்கள்.நீங்கள் யாருக்கும் உதவிசெய்ய முடியாது.சேவைதான் செய்ய முடியும்.அவர்களை வணங்குங்கள்,ஏழைகளிடம் கடவுளைக்காணுங்கள்,அவர்களுக்கு சேவை செய்யுங்கள்.பகவானே நோயாளியாக,பைத்தியமாக,பாவியாக நம் முன் வருகிறார்.மீண்டும் சொல்கிறேன்,இந்த உருவங்களில் கடவுளை வழிபட நமக்கு வாய்ப்பு கிடைத்தது பெறற்கரிய பேறாகும்.பிறர்மீது அதிகாரம் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்யமுடியும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.



நீங்கள் எங்கு சென்றாலும் தொழில் காரணமாக ஏற்படும் பிரிவினைகள் இருக்கவே செய்யும்.ஆனால் அதன் காரணமாக யாருக்கும் தனிச்சலுகை இருக்கவேண்டும் என்பதில்லை.இந்தத் தனிசலுகைகளின் தலையிலடித்து அவற்றை ஒழிக்கவேண்டும்.ஒரு மீனவனுக்கு வேதாந்தம் கற்பித்தோமானால் அவன் உன்னைப்போலவே நானும் நல்லவன்,நான்மீன் பிடிப்பவன்,நீ புரோகிதன்,ஆனால் உன்னில்போலவே என்னிலும் கடவுள் இருக்கிறார் என்று கூறுவான்.யாருக்கும் தனிச்சலுகையில்லை,எல்லோருக்கும்சமவாய்ப்புகள்.இதுவே நமக்குவேண்டும்.

---------சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment